சித்தூர் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி
திருமலை:
சித்தூர் மாவட்டம் எர்ரவாரிபாளையம் அடுத்த ஓ.எஸ்.கொள்ளப்பள்ளி வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழகத்தை சேர்ந்த 60 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அதிகாரிகளை பார்த்தவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பியோடி விட்டனர்.
அப்போது ஒருவர் விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விரட்டிச் சென்ற வனத்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பீலேரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து எர்ரவாரிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மின்சாரம் தாக்கி இறந்தவர் தமிழகத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய 59 பேரை தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.