செய்திகள்
முன்னாள் கடற்படை அதிகாரி மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது - பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கண்டனம்
மகாராஷ்டிராவில் முன்னாள் கடற்படை அதிகாரி மீதான தாக்குதல் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதது என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தில் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மதன் சர்மா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த சில ரவுடிகள் அவரை இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை விமர்சித்து சமூக ஊடகத்தில் வெளியான பதிவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததற்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவசேனாவை கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முன்னாள் கடற்படை அதிகாரி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ மும்பையில் குண்டர்களால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மாவை தொடர்பு கொண்டு அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்.
முன்னாள் கடற்படை அதிகாரி மீதான இத்தகைய தாக்குதல் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் மோசமான நிகழ்வு ஆகும். மதன் அவர்கள் விரைவில் குணமடைந்த எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.