செய்திகள்
நீட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 17 வயது மாணவன் கடிதம்
நீட் மற்று ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 17 வயது நிரம்பிய மாணவன் கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்‘ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரையும் திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிக்கை வெளியிட்டது.
ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகளை தள்ளிவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நிட், ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், திட்டமிட்ட தேதிகளில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்ற கருத்தில் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டேவுக்கு 17 வயது மாணவன் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில் நாட்டில் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பரவல், வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மாணவர் தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி 17 வயது மாணவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.