செய்திகள்
கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன்

மாநிலங்கள் கடன்பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன - நிர்மலா சீதாராமன்

Published On 2020-08-27 12:53 GMT   |   Update On 2020-08-27 12:53 GMT
மாநிலங்கள் கடன்பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தொழில்கள், உற்பத்தி முடங்கி உள்ளதால் ஜி.எஸ்.டி வரியைச் செலுத்த முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர்.  இதனால், ஜிஎஸ்டி வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை. உடனே மத்திய அரசு ஜிஎஸ்.டி இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி  பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் மாநில நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டம் 5 மணி நேரம் நீடித்தது. 

அதன்பின் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம். மாநிலங்கள் கடன்பெறும் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும், காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை செயலர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நடப்பாண்டு ஜி.எஸ்.டி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீடு சட்டப்படி மாநில அரசுகளுக்கு  இழப்பீடு வழங்க வேண்டும். 2019-20 நிதி ஆண்டில் 1.65 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
Tags:    

Similar News