செய்திகள்
அசாம் மாநில முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய்

அசாம் மாநில முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய்க்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-26 23:04 GMT   |   Update On 2020-08-26 23:04 GMT
அசாம் மாநில முன்னாள் முதல்-மந்திரி தருண் கோகாய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் அரசில் முதல்-மந்திரியாக இருந்தவர் தருண் கோகாய்.

அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அவர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார்.

அதில், “எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

டாக்டர்கள் அறிவுறுத்தலின்பேரில், தருண் கோகாய், தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருடைய மனைவி டாலி கோகாய்க்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்று தெரிய வந்தது.

அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13-வது எம்.எல்.ஏ. தருண் கோகாய் ஆவார். இவர்களில் 7 பேர் பா.ஜனதாவையும், 3 பேர் காங்கிரசையும், 2 பேர் அசாம் கண பரிஷத்தையும், ஒருவர் ஏ.ஐ.யு.டி.எப். கட்சியையும் சேர்ந்தவர்கள்.

மாநிலங்களவை பா.ஜனதா எம்.பி. காமாக்ய பிரசாத் டாசா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அசாமை சேர்ந்த அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News