செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு : அத்வானி வழக்கில் தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்க ஒரு மாதம் அவகாசம்

Published On 2020-08-23 00:50 GMT   |   Update On 2020-08-23 00:50 GMT
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு வழங்க ஒரு மாதம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கர சேவகர்கள் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அதை இடித்து தரை மட்டமாக்கினர். இது தொடர்பாக பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்ளிட்டவர்கள் மீது உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் குற்ற வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் தனிக்கோர்ட்டு விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் 8-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 32 பேரிடம் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 313-ன் கீழான விசாரணையை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நடத்தி முடித்து விட்டது.

அதே நேரத்தில் வழக்கு நடவடிக்கைகளை முடித்து, தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் அறிக்கை அனுப்பினார்.

அதை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நடவடிக்கைகளை முடித்து லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்குவதற்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் (செப்டம்பர் 30-ந் தேதி வரை) வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கில் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் தீர்ப்பு வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Tags:    

Similar News