செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு: சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு

Published On 2020-08-07 10:23 GMT   |   Update On 2020-08-07 10:23 GMT
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ரூ.225-க்கு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக உலகமே போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்காக விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காகவும், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து கண்டுபிடிக்கவும் இரவு, பகலாக ஆய்வுக்கூடங்களில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி, ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் ஆகும்.

மற்றொரு தடுப்பூசியான இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட சோதனைகளை புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அடுத்த சில நாட்களில் நடத்த உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 1,600 பேருக்கு 17 இடங்களில் இந்த தடுப்பூசி போட்டு சோதிக்கப்படுகிறது.

இந்நிலையில், பரிசோதனைகளுக்கு பின்னர் அக்டோபர் மாதம் கோவிஷீல்டு தயாரிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், உலக வங்கியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் (LMIC) கொண்ட நாடுகளாக வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு, தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News