செய்திகள்
பிரதமர் மோடி

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச்சுற்று - கோவை மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி

Published On 2020-08-01 11:32 GMT   |   Update On 2020-08-01 11:32 GMT
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில் மாணவர்களுடன் கலந்துஉரையாடிய பிரதமர் மோடி, கோவை மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறினார்.
புதுடெல்லி:

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 (Software) போட்டியின், மாபெரும் இறுதிச்சுற்று, இன்று (ஆகஸ்ட் 1) முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியில், பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக இன்று உரையாற்றினார்.
 
கோவையைச் சேர்ந்த மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறி தனது கலந்துரையாடலை தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது இளைஞர்கள் சவாலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கேட்க ஆவலாக உள்ளேன் என தெரிவித்தார்.

இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-இன் இறுதிச்சுற்று, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட  ஆன்லைன் முறையில்  நடத்தப்படுகிறது. 

இந்தாண்டு போட்டியில்,  மத்திய அரசின் 37 துறைகள், 17 மாநில அரசுகள் மற்றும் 20 தொழில் நிறுவனங்களின் சார்பில் வரப்பெற்ற 243 கண்டுபிடிப்புகளில், 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் ரூ.1,00,000 வழங்கப்படுவதுடன்,  போட்டியில்  வெற்றிபெறும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு 1வது,  2வது மற்றும் 3வது பரிசாக முறையே, ரூ.1,00,000,  ரூ.75,000 மற்றும் ரூ.50,000 வழங்கப்படும்.
Tags:    

Similar News