செய்திகள்
அன்லாக்-3 தளர்வு: அரவிந்த் கெஜ்ரிவால் - துணைநிலை ஆளுநர் இடையே மோதல்
ஊரடங்கு தளர்வு விவகாரத்தில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்தியாவில் மே 31-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் ஊரடங்குடன் கூடிய அன்லாக் என்ற முறையில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து அன்லாக் 3-க்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. போக்குவரத்திற்கு இ-பாஸ் தேவையில்லை. பயிற்சி கூடங்கள் போன்றவற்றிக்கு தளர்வு அளித்துள்ளது. ஆனால் மாநில அரசுகள் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் டெல்லியில் ஓட்டல்களை திறக்கவும், வார சந்தைகளை (weekly markets) பரிசோதனை அடிப்படையில ஒரு வாரம் திறக்கவும் மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி அளித்தார்.
ஆனால், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அதை நிராகரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் மேலும் மோதல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் சூழ்நிலை இன்னும் மோசமான நிலையில்தான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் அரசு எடுத்து வரும் பல நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதால் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.