செய்திகள்
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி- சபாநாயகரின் அப்பீல் மனுவை திரும்ப பெற உச்ச நீதிமன்றம் அனுமதி
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக தொடர்ந்த மனுவை ராஜஸ்தான் சபாநாயகர் திரும்ப பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
புதுடெல்லி:
ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையை ஜூலை 24-ம் தேதி வரை ஒத்திவைக்கும்படி ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து சட்டப்பேரவை சபாநாயகர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சபாநாயகரின் கோரிக்கையை நிராகரித்தது.
அதேசமயம், சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கு ஜூலை 24-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைக்கு சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
மேலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அதன் நகர்வுகளை பொறுத்து இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக ராஜஸ்தான் சபாநாயகர் அறிவித்தார். இதனால், மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ராஜஸ்தான் சட்டசபையை கூட்டுவது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டின் கோரிக்கையை ஆளுநர் இரண்டாவது முறையாக நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.