செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி பதவியில் 3 ஆண்டுகளை நிறைவு செய்தார் ராம்நாத் கோவிந்த்

Published On 2020-07-26 02:57 GMT   |   Update On 2020-07-26 02:57 GMT
ஜனாதிபதி பதவியில் ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
புதுடெல்லி:

இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்றார். அவர் ஜனாதிபதி பதவிக்கு வந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தன. இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 ஆண்டுகள் பதவி காலத்தை நிறைவு செய்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவி ஏற்றதில் இருந்து இதுவரை ஜனாதிபதி மாளிகைக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 292 பேர் பார்வையாளர்களாக வந்து உள்ளனர்.

நோய்த்தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில் நாட்டு மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கு ஜனாதிபதியும், அவரது மனைவியும் மற்றும் குடும்பத்தினரும் ஆதரவாக உள்ளனர். பிரதமர் நிவாரண நிதிக்கு (பி.எம்.கேர்) தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ள ஜனாதிபதி, ஓர் ஆண்டுக்கான சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக் கொள்ள முடிவு செய்து உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக துணை ஜனாதிபதியுடன் இணைந்து மாநில கவர்னர்கள் மற்றும் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்களுடன் இரு முறை காணொலி காட்சி மூலம் உரையாடி இருக்கிறார்.

19 மாநிலங்களுக்கும், 4 யூனியன் பிரதேசங்களுக்கும் சென்று இருக்கிறார். இதுவரை ஜனாதிபதி மாளிகையிலும், பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட சமயங்களிலும் 6,991 பேரை ராம்நாத் கோவிந்த் சந்தித்து இருக்கிறார். ஒரு நாளைக்கு ராணுவ வீரர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை, விவசாயிகள் முதல் தீயணைப்பு வீரர்கள் வரை சராசரியாக 20 பேரை அவர் சந்திக்கிறார்.

மத்திய அரசின் 48 மசோதாக்களுக்கும், மாநில அரசுகளின் 22 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ள அவர், 13 அவசர சட்டங்களையும் பிறப்பித்து இருக்கிறார். இதுவரை 11 மாநிலங்களுக்கு கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, தலைமை தகவல் ஆணையர், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் ஆகியோரை நியமித்து இருக்கிறார்.

Tags:    

Similar News