செய்திகள்
சிவசேனா

மாநிலங்களில் ஆட்சியை கலைக்கும் வேலையில் பாஜக ஈடுபடுகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

Published On 2020-07-15 02:38 GMT   |   Update On 2020-07-15 02:38 GMT
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்கும் வேலையில் பாரதீய ஜனதா ஈடுபட்டு வருகிறது என சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை :

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதை அடுத்து பரபரப்பான அரசியல் சூழல் உருவாகி உள்ளது.

இந்தநிைலயில் ராஜஸ்தான் விவகாரத்தில் சிவசேனா கட்சி பாரதீய ஜனதாவை கடுமையாக சாடியுள்ளது. பாரதீய ஜனதா, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் ஈடுபடுவதாகவும், குதிரை பேரத்தை ஊக்குவிப்பதாகவும் சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்து அக்கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கலைக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். நாடு கொரோனா பிரச்சினையால் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. சீனாவுடன் எல்லை பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்ப்பதைவிட்டு பாரதீய ஜனதா காங்கிரஸ் உள்கட்சி பிரச்சினையில் தலையிட்டு, ராஜஸ்தானில் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது. பாலைவனத்தில் புயலால் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையில் பா.ஜனதா எதை சாதித்துவிடப்போகிறது? இதுபோன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாலைவனமாக்கிவிடும். பாரதீய ஜனதா நாட்டையே ஆளுகிறது.

சில மாநிலங்களை எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யவும் விடவேண்டும். அதுதான் ஜனநாயகத்துக்கு பெருமிதமாக இருக்கும். மத்திய பிரதேசத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா 22 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாரதீய ஜனதாவில் போய் சேர்ந்தாா். அப்போதே பைலட்டும், சிந்தியாவின் வழியில் செயல்படுவார் என்பது எல்லோரும் கணித்தது தான். எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு தான் ராஜஸ்தானில் காங்கிரசின் எதிர்காலத்தை முடிவு செய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News