செய்திகள்
வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதால் எழுந்த தீப்பிழம்பு

வெடிகுண்டுகளுடன் வந்த காரை சிதறடித்த பாதுகாப்பு படை- மற்றொரு புல்வாமா சம்பவம் தவிர்ப்பு

Published On 2020-05-28 06:34 GMT   |   Update On 2020-05-28 06:34 GMT
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த காரை பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்து வெடிக்கச் செய்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் நோக்கத்துடன், காரில் வெடிகுண்டுகளை ஏற்றி வருவதாக நேற்று இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனைச் சாவடியில் அந்த காரை மடக்கினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் பாதுகாப்பு படையினர் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டான். பின்னர் காரை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.  அதில் சுமார் 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுணடு நிபுணர்கள் மூலம் அந்த காருடன் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. வெடிகுண்டுகளுடன் வந்த காரை உரிய நேரத்தில் மடக்கிப் பிடித்ததால், மற்றொரு புல்வாமா தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் வந்த வாகனங்கள் மீது, பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தினான். இதில், 40 வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News