செய்திகள்
மே 3ம் தேதி மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் - முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்
கொரோனா தடுப்பு பணியில் உள்ள தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் வகையில் மே 3-ம் தேதி மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் இன்று மாலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியதாவது:
ஆயுதப்படைகள் சார்பில் கொரோனா போராளிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர், மீடியா துறையை சேர்ந்தவர்கள், இந்த கடினமான நேரத்தில், மக்களை எப்படி காப்பது என்ற அரசின் செய்தியை கொண்டு சேர்த்துள்ளனர்.
கொரோனா தடுப்பில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் பறந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.
கடற்படை சார்பில் கடலில் கப்பல்கள் அணிவகுப்பு நடத்தப்படும். கடற்படை விமானங்களும், மருத்துவமனைகள் மீது மலர் தூவும்.
ராணுவம் சார்பில் அணிவகுப்பு பேண்ட் வாத்திய இசைநிகழ்ச்சி நடத்தப்படும். மாவட்டங்களில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். போலீஸ் நினைவிடத்தில் பாதுகாப்பு படை சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும்.
கொரோனா பாதித்த சிவப்பு மண்டலங்களில் போலீசார் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் எந்த நடவடிக்கையும் அவர்களால் எடுக்க முடியும். அங்கு ராணுவத்தை களமிறக்குவதற்கான தேவையில்லை. பயங்கரவாதம் அல்லது ஊடுருவலுக்கு எதிரான நடவடிக்கையை நாங்கள் கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.