செய்திகள்
இந்தியாவில் 28 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு- உயிரிழப்பு 872 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், இதுவரை 872 பேர் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல், சமூக இடைவெளியை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வைரஸ் பரவுவதில் அதிவேகம் இல்லை என மத்திய அரசு கூறியிருப்பது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், பதிய நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வது கவலை அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 27,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது. 6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 8068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 342 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 3301 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 151 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2918 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 54 பேர் உயிரிழந்துள்ளனர்.