செய்திகள்
பிரதமர் மோடி நாளை முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாளை பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு பிரதமர் மோடி அறிவித்தார். அந்த வகையில் இதுவரை 2 தடவை அவர் மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) 3-வது முறையாக பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கொரோனா வைரஸ் பரவல் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக என்னென்ன மேற்கொள்ள வேண்டும், புதிய நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ள வேண்டுமா, ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளை எப்படி மேற்கொள்வது, ஏழைகள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எத்தகைய வசதிகளை செய்து கொடுப்பது போன்றவை பற்றி நாளை ஆலோசிக்கப்படுகிறது. அதன்பிறகு புதிய முடிவுகளை பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.