செய்திகள்
தற்போதைய சூழ்நிலை சமூக அவசரநிலை போன்றது - பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தை பார்க்கும்போது சூழ்நிலை சமூக அவசரநிலை போன்று உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வரும் இரண்டு வாரங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5500 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், அடிக்கடி மத்திய மந்திரிகள், மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி பல்வேறு கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் ஊரடங்கு உத்தரவை தளர்த்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது மோடி அவர்களிடம் கூறியதாக வெளியான செய்தியில் ‘‘தற்போது இந்தியாவில் நிலவும் சூழ்நிலை சமூக அவசரநிலைக்கு ஒத்ததாகும். இது கடுமையான முடிவுகளை அவசியமாக்கியுள்ளது, நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலை மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய மாற்ற உருவாக்குவதற்கான நிகழ்வு. அதை தடுத்து நிறுத்த நாம் தயாராக வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.