செய்திகள்
கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
பிரதமர் நிவாரண நிதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 33 பேரும் தலா 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளனர்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் வேகமாக பரவி கடும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் நிதி வழங்கலாம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதற்காக PM CARES என்ற பெயரில் தனி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில அரசுகள் அந்தந்த மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 33 பேரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் இந்த முன்மாதிரியான மற்றும் ஊக்கமளிக்கும் செயல்களுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி உள்ள மோடி, பிரதமரின் நிவாரண நிதிக்கு நீதிபதிகளின் பங்களிப்பு கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.