செய்திகள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 258 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க உள்ளனர்.
புதுடெல்லி:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 258 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கொரோனாவின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பயண கட்டுப்பாடுகள் மற்றும் சமூக தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாளை நாடு முழுவதும் பொதுமக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.