செய்திகள்
அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவில்லை எனில் பொது போக்குவரத்துக்கு தடை - உத்தவ் தாக்கரே
அவசியமற்ற பயணங்களை தவிர்க்கவில்லை எனில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கும் முடிவை எடுக்க நேரிடும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இதையடுத்து, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் 130 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில், மும்பாதேவி கோவில், மகாலட்சுமி ஆலயம், இஸ்கான் கோவில் ஆகியவை இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், அவசியமற்ற பயணங்களை தவிர்க்கவில்லை எனில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கும் முடிவை எடுக்க நேரிடும் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. எனினும் பஸ், ரெயில், ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.
நிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில் அவசரமற்ற பயணங்களை மக்கள் நிறுத்தாவிட்டால் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கும் ’கடுமையான முடிவு’ குறித்து பரிசீலிக்கப்படும்.
கொரோனா வைரசுக்கு இதுவரை 40 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 14 பெண்கள், 26 ஆண்கள் அடங்குவர். இதில் 39 பேரின் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஒருவரது நிலைமை கவலைக்குரியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.