செய்திகள்
நிர்பயா வழக்கு: கடைசி குற்றவாளியின் கருணை மனுவையும் நிராகரித்த ஜனாதிபதி
நிர்பயா வழக்கில் கடைசி குற்றவாளியின் கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்ததையடுத்து கூடிய விரைவில் 4 பேரும் தூக்கிலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா ஜனாதிபதியிடம் கருணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதனால், பவன் குமார் தாக்கல் செய்த கருணை மனுவில் ஜனாதிபதி மாளிகை எந்த முடிவையும் எடுக்கப்படாமல் மனு நிலுவையில் இருப்பதால் 4 குற்றவாளிகளின் தூக்குதண்டனையை தள்ளிவைக்கும்படி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி இன்று நிராகரித்துள்ளார்.
ஏற்கனவே மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதை காலம் தாழ்த்த கடைசி வாய்ப்பாக இருந்த குற்றவாளி பவன் குமாரின் மனுவையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
இதன் மூலம் டெல்லி திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தை அணுகி குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.