செய்திகள்
கொரோனா பாதிப்பு - தென்கொரியா, ஈரான், இத்தாலிக்கு செல்வதை தவிர்க்க மத்திய அரசு வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத் துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.
சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,715 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என கண்டறிய 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்தி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.