செய்திகள்
குற்றவாளி வினய் சர்மா

நிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி

Published On 2020-02-20 04:13 GMT   |   Update On 2020-02-20 04:13 GMT
நிர்பயா வழக்கில் மரண தண்டனையை தள்ளிப் போடுவதற்காக குற்றவாளி வினய் தன் தலையை சுவரில் மோதி காயப்படுத்தியிருக்கிறார்.
புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. 

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக  குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே, குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கில் போடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்துவருகிறது.

இந்நிலையில், குற்றவாளி வினய் சர்மா கடந்த 16-ம் தேதி திகார் சிறைச்சாலையில் தன்னைத் தானே காயப்படுத்தி உள்ளார். அறையில் உள்ள சுவரில் தலையை மோதியதால் வினய்க்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

சட்டரீதியான அனைத்து முயற்சிகளும் கைகொடுக்காத நிலையில், தூக்கில் போடுவதை தாமதப்படுத்துவதற்காக வினய் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நல்ல உடல்நலத்துடன் இருந்தால் மட்டுமே கைதி தூக்கிலிடப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News