செய்திகள்
காஷ்மீரில் விபிஎன் மூலம் சமூகவலைதளத்தில் தவறான தகவல்கள் பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு
ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோதமாக விபிஎன் செயலி மூலம் சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீர்:
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கு அங்கு இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமை சீரடைந்துவருவதையடுத்து செல்போன் இணையதள சேவைகள் 2ஜி வேகத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில வலைதளபக்கங்களை உபயோகப்படுத்த மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போலி செய்திகள் பரவுவதை தடுக்கவும், போராட்டங்களை தூண்டுவதை தடுக்கவும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதத்திலும் செய்திகள் வெளியாவதை தடுக்கவும் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு பிறப்பித்த உத்தரவையும் மீறி விபிஎன் எனப்படும் (Virtual Private Networks ) மெய்நிகர் தனிநபர் செயலி மூலம் சிலர் சமூகவலைதளங்களை பயன்படுத்தி வதந்தி, போலி செய்திகளை பரப்புவதை காஷ்மீர் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து விபிஎன் செயலியை பயன்படுத்தி போலியான, தவறான தகவல்களை பரப்புவதை காஷ்மீர் இளைஞர்கள் கைவிடவேண்டும் எனவும் இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அரசு பிறப்பித்த உத்தரவை மீறி விபிஎன் மூலம் சமூகவலைதளம் பயன்படுத்தி தவறான மற்றும் போலி தகவல்களை பரப்பி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடிய கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது காஷ்மீர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.