செய்திகள்
சிறுத்தைப்புலி

திருப்பதி மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தைப்புலி

Published On 2020-02-18 06:12 GMT   |   Update On 2020-02-18 06:12 GMT
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் நேற்று அதிகாலை ஒரு சிறுத்தைப்புலி, மானை துரத்தி கொண்டு ஓடி வேட்டையாடியது. அப்போது நடந்து வந்த பக்தர்கள் இதனை நேரில் பார்த்து கத்தி கூச்சலிட்டனர்.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் திவ்ய தரிசன பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 பாதைகள் வழியாக நடந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் கீழிருந்து மேலே ஏறும் படிக்கட்டுகளில் 250-வது படியில் நேற்று அதிகாலை ஒரு சிறுத்தைப்புலி, மானை துரத்தி கொண்டு ஓடி வேட்டையாடியது.

அப்போது நடந்து வந்த பக்தர்கள் இதனை நேரில் பார்த்து கத்தி கூச்சலிட்டனர். உடனே சிறுத்தைப்புலி, மானை சாப்பிடுவதை விட்டு காட்டுக்குள் தப்பியோடி விட்டது.

இதுகுறித்து பக்தர்கள், தேவஸ்தான பறக்கும்படை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மானின் உடலை தூக்கிச்சென்றனர்.

மான் இறந்து கிடந்த இடத்தில் ரத்தம் சிதறி கிடந்ததைப் பார்த்து பக்தர்கள் பீதியடைந்தனர். ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் இனிமேல் காலை 6.45 மணிக்கு பக்தர்கள் நடந்து வர அனுமதிக்கப்பட உள்ளனர்.

ஏற்கனவே அங்கு இரவு நேரத்தில் பக்தர்கள் நடந்து வர அனுமதியில்லை. பக்தர்கள் நடந்து மலைப்பாதையில் சிறுத்தைப்புலி வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News