செய்திகள்
டெல்லி சட்டசபை தேர்தல் - அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில்கள் இயங்கும்
தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், டெல்லி சட்டசபைக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிடப்படும்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டெல்லியில் கடந்த ஜனவரி 6-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 3-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது.
டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் ஈடுபட்டன. இதற்காக நடைபெற்ற பேரணிகள், பிரசாரங்கள் மற்றும் போஸ்டர்கள் என டெல்லி முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றியுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. டெல்லி சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு கண்காணிப்பாளராக வினோத் ஜட்ஷியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு மெட்ரோ ரெயில் நிர்வாகம் நாளை அதிகாலை 4 மணி முதல் செயல்பட உள்ளது என டெல்லி மெட்ரோ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.