செய்திகள்
முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சி - ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
புதுடெல்லி:
குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29-ம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பே பாசறை திரும்புதல் ஆகும். இந்நிகழ்வு டெல்லியில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெறுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பாசறை திரும்பும் நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க டெல்லி விஜய் சவுக்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் ஏற்றனர்.
வண்ணமயமான சீருடைகளுடன் இசைக்கருவிகளை வாசித்தபடி முப்படைகளின் இசைக்குழுக்களும் நடத்திய அணிவகுப்பு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. வழக்கமாக மேற்கத்திய இசை வாசிக்கப்படும் நிலையில் இம்முறை இந்திய இசையும் வாசிக்கப்பட்டது.