செய்திகள்
பெண் டிரைவர்

மும்பையின் முதல் ஏ.சி. மின்சார ரெயிலை ஓட்டும் பெண் டிரைவர்

Published On 2020-01-29 05:47 GMT   |   Update On 2020-01-29 05:47 GMT
மும்பையில் முதல் முறையாக தானே- பன்வேல் இடையே இயக்கப்படும் மின்சார ஏ.சி. ரெயிலை பெண் டிரைவர் மனிஷா மஷ்கே இயக்க உள்ளார்.
மும்பை:

மும்பையில் உள்ளூர் மின்சார ரெயில்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து பயணிகள் வசதிக்காக மின்சார ஏ.சி. ரெயில்கள் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய ரெயில்வே மூலம் தானே- பன்வேல் இடையே மின்சார ஏ.சி. ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை வருகிற 30-ந்தேதி முதல் பெண் டிரைவர் மனிஷா மஷ்கே இயக்க உள்ளார். மும்பையில் புறநகர் ஏ.சி. மின்சார ரெயிலை இயக்கும் முதல் பெண் என்ற சிறப்பை மனிஷா மஷ்கே பெறுகிறார்.

அவர் இயக்கும் ஏ.சி. மின்சார ரெயில் தினமும் 16 முறை சென்று வரும். இதில் காலை மற்றும் மாலையில் அதிக கூட்டம் இருக்கும் நேரத்தில் தலா 3 முறை இயக்கப்படும்.

மனிஷா மஷ்கே கடந்த 2002-ம் ஆண்டு சரக்கு ரெயிலில் உதவி டிரைவராக பணியில் சேர்ந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மோட்டார் பிரிவுக்கு பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு முதல் மின்சார ரெயில்களை இயக்கி வருகிறார்.

ஏ.சி. மின்சார ரெயிலை இயக்குவது ஒரு பாக்கியம். மேலும் மிகப்பெரிய பொறுப்பும் ஆகும். இந்த தருணத்தை நான் என்றென்றும் மனதில் வைத்து இருப்பேன்.

நான் ரெயில்வே பணிக்கு மும்பையில் தேர்வானேன். ஆனால் எனக்கு சோலாப்பூரில் பணி ஒதுக்கப்பட்டது. இதனால் பணியில் சேர விருப்பம் இல்லாமல் இருந்தேன். ஆனால் எனது சகோதரர் தான் பணியில் சேரும்படி வலியுறுத்தினார். நான் பட்டப்படிப்பு முடித்ததும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்குவதுதான் எனது லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனிஷா மஷ்கே ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரானிக்ஸ் படிப்பு படித்துள்ளார்.
Tags:    

Similar News