செய்திகள்
சாலை விபத்தில் காயமடைந்த ஷபானா ஆஸ்மி விரைவில் குணமடைய வேண்டும் - பிரதமர் மோடி
இந்தி திரைப்பட மூத்த நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயமடைந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பை:
இந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகை ஷபானா ஆஸ்மி (69). இவர் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.
மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை 3.30 மணியளவில் சென்றபோது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் அவர் படுகாயமடைந்து உள்ளார்.
இதையடுத்து, ஷபானா ஆஸ்மி மீட்கப்பட்டு உடனடியாக நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷபனா ஆஸ்மியுடன் அவரது கணவர் ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார். எனினும் விபத்தில் அவர் காயமின்றி தப்பினார்.
நடிகை சபானா ஆஸ்மி சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை 5 முறை பெற்றுள்ளார். மேலும், இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயமடைந்ததை கேள்விப்பட்ட பிரதமர் மோடி, விரைவில் அவர் குணமடைய வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.