செய்திகள்
இரண்டு நாள் பயணமாக கர்நாடகம் வந்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகத்திற்கு வந்தார். முதல் நாளான இன்று தும்கூரு சித்தகங்கா மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பெங்களூரு:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு இன்று வந்தார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை முதல்வர் எடியூரப்பா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து பிரதமர் மோடி தும்கூருக்கு புறப்பட்டுச் சென்றார். தும்கூரில் உள்ள ஸ்ரீ சித்தகங்கா மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து, இன்று மாலை அரசு ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இதே மைதானத்தில் மகாத்மா காந்தி கடந்த 1934ம் ஆண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் கர்நாடக சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, சித்தகங்கா மடம் மற்றும் ஜூனியர் கல்லூரி மைதானம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தும்கூரு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பெங்களூரு செல்லும் மோடி, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்துக்கு சென்று பார்வையிடுகிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை பெங்களூரு வேளாண் பல்கலைக் கழகத்தில் 107வது இந்திய அறிவியல் மாநாட்டில் பங்கேற்கிறார்.