செய்திகள்
பிரணாப் முகர்ஜி

ஜார்க்கண்ட் முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பு

Published On 2019-12-27 14:46 GMT   |   Update On 2019-12-27 14:46 GMT
ஜார்க்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி மற்றும் சில மாநிலங்களின் முதல் மந்திரிகள் பங்கேற்கின்றனர்.
புதுடெல்லி:

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
 
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றிபெற்றார்.

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன், மாநில கவர்னர் திரவுபதி முர்முவை சந்தித்து 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் அளித்தார், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஹேமந்த் சோரன், டிசம்பர் 29-ம் தேதி பதவியேற்க உள்ளேன் என தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஜார்க்கண்டில் 29-ம் தேதி நடைபெற உள்ள ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
Tags:    

Similar News