செய்திகள்
பொருளாதார மந்தநிலையில் இருந்து நாடு விரைவில் மீண்டுவரும் - பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்
இந்தியா பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து சில மாதங்களில் மீண்டுவரும் என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
இந்தியா-அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை வாஷிங்டன் மாகாணத்தில் நாளை நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று அமெரிக்கா சென்றனர்.
அமெரிக்காவில் உள்ள இந்திய தலைமை தூதரகத்தின் சார்பில் ஆசிய சமூகம் கல்வி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ராஜ்நாத் சிங் அங்கு வாழும் இந்தியர்களிடையே பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
'உலக அளவில் பொருளாதர மந்தநிலை நிலவிவருகிறது. இதன்காரணமாக இந்தியாவின் பொருளாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், இன்னும் சில மாதங்களில் பொருளாதார மந்தநிலையில் இருந்து இந்தியா மீண்டுவரும் என்பதை உறுதியுடன் கூறுகிறேன்.
நுகர்வோரின் தேவையை அதிகரிப்பதன் மூலமாகவே உலக பொருளாதார மந்தநிலையை நாம் எதிர்கொள்ள முடியும். பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சலுகைகளை வழங்கிவருகிறது.
உலகம் முழுவதும் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தபோதும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகவில்லை. இந்தியாவில் நுகர்வோர் தேவை நல்ல நிலையில் உள்ளதால் இந்த இக்கட்டான நிலையில் இருந்து விரைவில் மீண்டுவருவோம்’ என அவர் பேசினார்.