செய்திகள்
திருப்பதி மலைப்பாதை

திருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்

Published On 2019-12-14 05:01 GMT   |   Update On 2019-12-14 05:01 GMT
திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் தெரிவித்தார்.
திருமலை:

திருமலைக்குச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு கஜபதிராவ் பூபால் கூறியதாவது:

திருமலை மலைப்பாதையில் சாலை விபத்து அதிக அளவில் ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த வேகக்கட்டுப்பாட்டுடன் நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்ல 28 நிமிடங்களும், திருமலையிலிருந்து திருப்பதிக்கு வர 40 நிமிடங்களும் என தேவஸ்தானம் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. எனினும் மலைப்பாதையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாததால் பெரிய வாகனங்களை கடக்கும்போது சுற்றுச்சுவரில் மோதி தங்களின் உயிரை இழந்து வருகின்றனர்.



இதை தடுக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆயினும் அதை இருசக்கர வாகன ஓட்டிகள் கடைப்பிடிப்பதில்லை. அதனால் வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் திருமலை மலைப்பாதையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News