செய்திகள்
ஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவர், வீடு இல்லாததால் மூன்று ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கிறார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திரவுபதி பெஹரா (வயது 72). பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த மூதாட்டியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மகள் மற்றும் பேரனுடன் வசித்து வருகிறார்.
இந்த மூதாட்டிக்கு சொந்தமாக வீடு இல்லை. எனவே, கிராம நிர்வாகம் சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட கழிவறையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வருகிறார். சமையல் செய்வது, தூங்குவது எல்லாம் இந்த சிறிய அறையில்தான். மகளும், பேரனும் அந்த அறைக்கு வெளியே தூங்குகிறார்கள்.
அரசு சார்பில் வீட்டு கட்டித் தரப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். எனவே, அரசு தனக்கு வீடு கட்டிக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் இந்த மூதாட்டி.
இதுபற்றி அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், ‘அந்த மூதாட்டிக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு எனக்கு நேரடியாக அதிகாரம் கிடையாது. ஏதாவது அரசுத் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டால், அவருக்கு வழங்குவோம்’ என்றார்.