செய்திகள்
முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன்

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Published On 2019-12-06 02:23 GMT   |   Update On 2019-12-06 06:03 GMT
தெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஐதராபாத்:

தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது27). கால்நடை டாக்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த மாதம் 27-ந்தேதி மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுங்கச்சாவடியில் அவரது மோட்டார்சைக்கிள் டயர் பஞ்சர் ஆனது. அப்போது லாரி தொழிலாளர்கள் 4 பேர் அவருக்கு உதவி செய்வதாக கூறினர்.

4 பேரும் திட்டமிட்டு மோட்டார்சைக்கிளின் டயரை பஞ்சராக்கி பெண் டாக்டரை அங்கிருந்து கடத்திச் சென்றனர். பின்னர் வாயில் மதுவை ஊற்றி மயக்கம் அடைய செய்து கற்பழித்து கழுத்தை நெரித்து கொன்றனர்.

அவரது உடலை அருகே உள்ள பாலத்துக்கு கீழே கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

பிரியங்காவை கற்பழித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லாரி தொழிலாளர்கள் சென்ன கேசலு, முகமதுபாஷா, நவீன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் கடந்த 29-ந்தேதி கைது செய்தனர்.

சி.சி.டி.வி. கேமராவில் குற்றவாளிகள் 4 பேரும் பெண் டாக்டரை கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் டாக்டர் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்த அரசியல் கட்சி தலைவர்களையும் திருப்பி அனுப்பினர். சாம்ஷாபாத் முக்கிய சாலையை மூடி அப்பகுதி மக்கள் குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என்றும் அடித்துக் கொல்ல வேண்டும் என்றும் பெண் உறுப்பினர்கள் ஆவேசமாக பேசினார்கள்.

இது போன்ற குற்றவாளிகளை தண்டிக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட தங்கள் மகன்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று கைது செய்யப்பட்ட 2 பேரின் தாயார் கூறி இருந்தனர்.

இதைத் தொடர்ந்து அரசு கடும் நடவடிக்கையில் இறங்கியது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் தாமதம் செய்ததாக 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்க தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதால் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இன்று அதிகாலை 3 மணிக்கு 4 பேரையும் ஐதராபாத் போலீசார் பெண் டாக்டரை எரித்துக் கொன்ற ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அழைத்து சென்றனர்.

கொலை நடந்த பாலத்தின் அருகே சென்றபோது அவர்கள் எப்படி கொலை செய்தார்கள் என்பதை நடித்து காட்டினார்கள். அப்போது 4 பேரும் திடீரென போலீசாரின் ஆயுதங்களை பறித்தும், கற்களால் தாக்கியும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.



இந்த என்கவுண்டர் சம்பவத்துக்கு சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார்  முக்கிய காரணமாக இருந்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதற்கு முன்பு அவர் வாரங்கல்லில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய 2 பேரை “என்கவுண்டர்” செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் டாக்டரின் தந்தை கூறும்போது, “4 குற்றவாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதால் எனது மகளின் ஆன்மா சாந்தி அடையும். என்கவுண்டர் செய்த போலீசாருக்கும், தெலுங்கானா அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது மகள் கொல்லப்பட்ட 10 தினங்களில் நீதி கிடைத்துள்ளது” என்றார்.

“என்கவுண்டர்” செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து போலீசாருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News