செய்திகள்
வைரல் வீடியோவுக்கும் தெலுங்கானா சம்பவத்திற்கும் உண்மையில் தொடர்புண்டா?
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் காவலர்கள் குற்றவாளியை பொதுவெளியில் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில், காவல்துறை அதிகாரிகள், ஒருவரை பொதுவெளியில் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் காவல்துறை அதிகாரிகள் தாக்கும் நபர் தெலுங்கானா கொலை சம்பவ குற்றவாளி என கூறி சமூக வலைத்தளவாசிகள் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
வைரல் பதிவுகளில், தெலுங்கானா கொடூர சம்பவத்தில் தொடர்புடையவனை காவல் துறை அதிகாரிகள் தாக்குகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிய ஆய்வுகளில் இந்த வீடியோவிற்கும் தெலுங்கானா சம்பவத்திற்கும் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. இதே வீடியோ, 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர், போலீசாரால் தாக்கப்படுகிறார் என்ற தலைப்பில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா விவகாரத்தில் தொடர்புள்ள நான்கு பேரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.