செய்திகள்
மகாராஷ்டிராவில் அடுத்த பரபரப்பு - சரத்பவார் வீட்டில் பாஜக எம்.பி.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு பாஜக எம்பி சஞ்சய் காகடே சென்றுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிச் பதவியேற்றார். துணை முதல் மந்திரியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் அஜித் பவார் பொறுப்பேற்றார்.
பாஜகவுக்கு ஆதரவளித்ததால அக்கட்சியின் தலைவர் சரத் பவார் நேற்று இரவு அஜித் பவாரை சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வீட்டுக்கு பாஜக எம்பி சஞ்சய் காகடே சென்றுள்ளது மகாராஷ்டிரா அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்பியான சஞ்சய் காகடே இன்று காலை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டிற்கு நேரில் சென்றார். கடைசி நேரத்தில் அஜித் பவார் பாஜக உடன் கைகோர்த்த நிலையில் சரத்பவாரை சமரசம் செய்ய முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் பாஜக எம்பியின் திடீர் சந்திப்பால் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.