செய்திகள்
அனைத்து தொழிற்சாலைகளிலும் இரவு ஷிப்ட்களில் பெண்கள் பணியாற்ற கர்நாடக அரசு அனுமதி
கர்நாடகாவில் அனைத்து தொழிற்சாலைகளிலும் இரவு நேர ஷிப்ட்களில் பெண்கள் பணியாற்ற மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பெங்களுர்:
கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களில் இரவு ஷிப்ட்களில் (இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) பணிபுரிய பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பிற நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இரவு ஷிப்ட்டுகளில் பெண்கள் பணியாற்ற அணுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அனைத்து தொழிற்சாலைகளிலும் இரவு 7 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான ஷிப்ட்களில் பெண்கள் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்ததாவது, 'தொழில் நிறுவனங்கள் அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளை பின்பற்றி தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை இரவு ஷிப்ட்களில் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ பணியமர்த்திக் கொள்ளலாம்.
ஆனால், பெண் ஊழியர்களை வற்புறுத்தி வலுக்கட்டாயமாக பணிபுரிய நிர்ப்பந்தப்படுத்தக் கூடாது. இரவு ஷிப்ட்களில் பணிபுரிய விருப்பமுள்ள பெண் ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்ற பின்னரே அவர்களை இரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.