செய்திகள்
அயோத்தி வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள்

அயோத்தி தீர்ப்பில் ஒருமித்த முடிவை உருவாக்கிய நீதிபதிகள்

Published On 2019-11-11 06:34 GMT   |   Update On 2019-11-11 10:26 GMT
அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளுமே ஒரே மாதிரியாக ஒருமித்த கருத்துடன் தீர்ப்பை கூறினார்கள். மிக முக்கியமான பிரச்சனை என்பதால் ஒருமித்த கருத்து இருந்தால் இதற்கு நல்ல தீர்வு ஏற்படும் என்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்துள்ளனர்.
புதுடெல்லி:

பொதுவாக அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது ஒருசில நீதிபதிகள் மற்ற நீதிபதிகளில் இருந்து மாறுபட்ட தீர்ப்புகளை வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கும்போது அது மேலும் சில சிக்கல்களை உருவாக்கும்.

ஆனால் அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளுமே ஒரே மாதிரியாக ஒருமித்த கருத்துடன் தீர்ப்பை கூறினார்கள். மிக முக்கியமான பிரச்சனை என்பதால் ஒருமித்த கருத்து இருந்தால் இதற்கு நல்ல தீர்வு ஏற்படும் என்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்துள்ளனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை ஆகஸ்ட் 6-ந்தேதி தொடங்கியது. அப்போதில் இருந்தே ஒவ்வொரு நீதிபதியும் தங்களது எண்ணங்களை எழுதி வந்தனர்.

அக்டோபர் 16-ந் தேதி வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. உடனேயே நீதிபதிகள் ஒவ்வொருவரும் தீர்ப்பை எழுத தொடங்கினார்கள். அதன்படி அதற்கான நடவடிக்கைகளும் தொடங்கின. இதன் தீர்ப்பு டிராப்டு நவம்பர் 3-ந்தேதி தயாரானது. பின்னர் அது அனைத்து நீதிபதிகளுக்கும் பறிமாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு அதில் சில மாற்றங்கள், திருத்தங்கள் போன்றவற்றை செய்தார்கள்.

அப்போதே ஒரு மித்த கருத்துக்கள் உள்ளவாறு தீர்ப்பு அமைக்கப்பட்டிருந்தது. தீர்ப்பை அடுத்து பிரச்சனைகள் வரலாம் என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை வரைவு தீர்ப்பு எழுதி முற்றிலும் முடிக்கப்பட்டது. வியாழக்கிழமை இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு முழு தீர்ப்பும் தயாராகி இருந்தது.

அதன்பிறகு போலீஸ் அதிகாரிகள், மத்திய உள்துறை மற்றும் உளவு அமைப்புகளிடம் நிலைமை குறித்து அறிக்கை கேட்கப்பட்டது. அவர்கள் எல்லாம் சீராக இருப்பதாக அறிக்கை அளித்தனர். அதை தொடர்ந்தே சனிக்கிழமை தீர்ப்பை வழங்கினார்கள்.
Tags:    

Similar News