செய்திகள்
திருவனந்தபுரம் எம்.ஜி. ரோட்டில் சாலையே தெரியாத அளவிற்கு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை

Published On 2019-10-22 05:02 GMT   |   Update On 2019-10-22 05:02 GMT
கேரளாவின் தென் மாவட்டங்களான திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று மிக கனத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிந்த ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வங்கக்கடலில் குமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்தமும் சேர்ந்து கொள்ள கேரளாவின் தென்பகுதியில் மிக கனத்த மழை பெய்கிறது.



கேரளாவின் தென் மாவட்டங்களான திருவனந்தபுரம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று மிக கனத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடப்பட்டிருப்பதால் இங்கு பேரிடர் மீட்புக்குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

4 மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக பள்ளிகளில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த 4 மாவட்டங்களுக்கும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கண்ணூர், காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு, கோட்டயம், ஆலப்புழா, பத்தினம் திட்டா, கொல்லம் ஆகிய 8 மாவட்டங்களிலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அபாயகரமான பகுதிகளில் வசிப்போர் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரும் படியும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ரெயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகே ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் ரெயில்கள் தாமதமாக சென்றது.



Tags:    

Similar News