செய்திகள்
ராஜஸ்தானில் வேன் - ஜீப் பயங்கர மோதல்: 13 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் வேன் - ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அம்மாவட்டத்தின் பலிசர் என்ற கிராம பகுதியை வேன் கடந்தபோது எதிர்பாராத விதமாக வேனின் முன்புற டயர் வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் மறுபுறம் வந்துகொண்டிருந்த ஜீப் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் இரு வாகனங்களிலும் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதல் மந்திரி அஷோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.