செய்திகள்
கற்பழிப்பு (கோப்புப்படம்)

கேரளாவில் 12 வயது பள்ளி சிறுமிக்கு 30 பேர் பாலியல் கொடுமை

Published On 2019-09-24 05:10 GMT   |   Update On 2019-09-24 05:10 GMT
கேரளாவில் 12 வயது பள்ளி சிறுமிக்கு 30 பேர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிறுமியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.

அந்த சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை நடந்து வருவதாக பள்ளி நிர்வாகத்திற்கு அந்த பகுதி மக்களிடம் இருந்து புகார்கள் சென்றது. இதனால் பள்ளி நிர்வாகம் அதுபற்றி அறிந்து கொள்ள அந்த சிறுமியை தனியாக அழைத்து விசாரித்தனர்.

சிறுமியிடம் நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில் அவருக்கு பாலியல் கொடுமை நடந்தது உண்மை என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த தகவலை குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி அவர்களிடமும் கண்ணீருடன் கூறினார்.

பள்ளி சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி மலப்புரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது வீடு அருகே வசிப்பவர்கள் என்று பலரிடமும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் கொடுமை நடந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. 30-க்கும் மேற்பட்டவர்கள் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த சிறுமியின் பெற்றோரும் உடந்தையாக இருந்த தகவலும் போலீஸ் விசாரணையில் வெளியானது.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் தந்தை மற்றும் மேலசெல்லரி பகுதியை சேர்ந்த அ‌ஷரப் (வயது 36), செங்காலங்காடி பகுதியை சேர்ந்த சைஜு (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமியின் பாதுகாப்பு கருதி அவரது தந்தையின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. மேலும் தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி மலப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.

சிறுமியின் வீடு அருகே வசிக்கும் பொதுமக்கள் இதுபற்றி கூறும்போது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமையில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News