செய்திகள்
மத்திய அரசு

அரசு பங்களாக்களை காலி செய்யாத 82 முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ்

Published On 2019-09-15 23:16 GMT   |   Update On 2019-09-15 23:16 GMT
அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாத 82 முன்னாள் எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
புதுடெல்லி:

பொதுவாக, ஒரு மக்களவை கலைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள், அந்த மக்களவையில் பதவி வகித்த எம்.பி.க்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து கொடுக்க வேண்டும். கடந்த மே 25-ந் தேதி, முந்தைய மக்களவையை கலைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். அதையடுத்து, பெரும்பாலான எம்.பி.க்கள் அரசு பங்களாவை காலி செய்தனர். ஒரு மாதத்துக்கு பிறகும், காலி செய்யாத சுமார் 200 எம்.பி.க்களுக்கு மக்களவை வீட்டு வசதிக்குழு ஒரு வாரம் ‘கெடு‘ விதித்து கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது. அதன்பிறகு பெரும்பாலான எம்.பி.க்கள் வீடுகளை காலி செய்து கொடுத்து விட்டனர்.

ஆனால், 82 எம்.பி.க்கள் இன்னும் வீடுகளை ஒப்படக்கவில்லை. இதனால், வீடுகளை காலி செய்யுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

நோட்டீஸ் அனுப்பிய நிலையிலும் காலி செய்ய மறுத்தால், அந்த எம்.பி.க்கள் மீது பொது இடங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும்) சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எம்.பி.க்களை வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், அவர்களது வீடுகளின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, சமையல் கியாஸ் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News