செய்திகள்
அடித்துக் கொண்ட காவலர்கள்

பங்கு பிரிப்பதில் தகராறு? ரத்தம் சொட்ட அடித்துக் கொண்ட காவலர்கள் - வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

Published On 2019-09-12 06:59 GMT   |   Update On 2019-09-12 06:59 GMT
நடுரோட்டில் இரு காவலர்கள் அடித்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.



இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டப்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழக்கத்தை விட பத்து மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இவற்றுடன் போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் வசூலிக்கும் வீடியோக்களும் அதிகம் வெளியாகி வருகின்றன.

அவ்வாறான வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. வீடியோவில் இரு காவலர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் பகீர் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவர்கள் வசூலித்த தொகையை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை தான் அடிதடி வரை சென்றிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.



வீடியோவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் 2013 ஆம் ஆண்டு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இது உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் நடைபெற்றது. பணி சார்ந்த அலுவல்களின் போது ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதம் முற்றி இரு காவலர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். 

இந்த சம்பவம் தற்சமயம் வசூல் தொகையை பிரிக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையில் இருவரும் தாக்கிக் கொண்டதாக பரப்பப்படுகிறது. இதுவே இச்சம்பவம் பண பிரச்சனைக்காக ஏற்பட்டதல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 41 நொடிகள் ஓடும் வீடியோவில் இரு காவலர்கள் தடியை கொண்டு பட்டப்பகலில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி்க் கொண்டனர்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். இவற்றை பரப்புவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News