செய்திகள்
சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்

அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளை போலீசார் அடித்தார்களா?

Published On 2019-09-10 03:55 GMT   |   Update On 2019-09-10 04:03 GMT
வாகன ஓட்டிகளை சரமாரியாக அடித்து போலீசார் அபராதம் வாங்குவதாக பரவும் வீடியோவின் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு வழக்கத்தை விட 10 மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் சிலர் அபராதம் செலுத்தியதற்கான சீட்டை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வாகன ஓட்டிகள் சிலரை காவல்துறையினர் லத்தியால் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தாததால் அவர்களை போலீசார் தாக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில் அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. 



ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் அமைந்துள்ள ரிஷி கல்லூரியில் மாணவர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களை போலீசார் லத்தியால் அடித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தான் அது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும். 

போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News