செய்திகள்
அஜித் தோவல்

இந்தியாவில் வன்முறைக்கு முயற்சியா? -பாகிஸ்தானில் இருந்து அனுப்பிய சங்கேத வார்த்தைகள் இடைமறிப்பு

Published On 2019-09-07 09:48 GMT   |   Update On 2019-09-07 09:48 GMT
இந்தியாவில் வன்முறையை தூண்டும் வகையில் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகளை இடைமறித்து கேட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் நிலவரம் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியதாவது:-

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட பிரிவு 370 நீக்கத்திற்கு பெருமளவிலான காஷ்மீரிகள் ஆதரவு வழங்கியுள்ளனர் என அறிந்து திருப்தியடைந்து உள்ளேன். சிறந்த வாய்ப்புகள், வருங்காலம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.  ஒரு சிலரே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொது ஒழுங்கை மாநில போலீசார் மற்றும் சில மத்திய படைகளே கையாளுகின்றன.  ராணுவத்தின் வன்முறை என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்கள் பயங்கரவாதிகளுடன் போர் செய்வதற்காக உள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள 199 காவல் நிலையங்களில் 10 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. மற்ற பகுதிகளுக்கு எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை.  காஷ்மீரில் லேண்ட்லைன் வழியான தொலைபேசி தொடர்பு வசதி 100 சதவீதம் அளவிற்கு செயல்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் புவியியல் பரப்பளவில் 92.5 சதவீதம் பகுதிகளில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

பாகிஸ்தான் பிரச்சனையை உருவாக்க முயற்சித்து வருகிறது. இதுவரை 230 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு உள்ளனர். சிலர் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர்.  சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களிடம் இருந்து காஷ்மீரிகளின் வாழ்வை பாதுகாக்க தீர்மானித்து உள்ளோம்.  ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள பாகிஸ்தானிய தொலைதொடர்பு டவர்களில் இருந்து வெளியான உரையாடல் இடைமறித்து கேட்கப்பட்டுள்ளது.

“எப்படி அதிகளவில் ஆப்பிள் ஏற்றி கொண்டு லாரிகள் செல்கின்றன? அதனை தடுக்க முடியவில்லையா? உங்களுக்கு வளையல்களை அனுப்பி வைக்கவா?” என்று பாகிஸ்தானில் உள்ளவர்கள் இங்குள்ள அவர்களது ஆட்களுக்கு தகவல்களை அனுப்ப முயற்சித்துள்ளனர். அமைதியை சீர்குலைப்பதற்கான பாகிஸ்தானின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம்.

இங்கு அரசியல் தலைவர்கள் தடுப்பு காவலில் உள்ளனர்.  அவர்கள் ஒன்று கூடினால், அதனை பயங்கரவாதிகள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது.  அவர்கள் மீது குற்ற வழக்கோ அல்லது தேசத்துரோக வழக்கோ இல்லை.  ஜனநாயகம் செயல்படும் சூழ்நிலை வரும்வரை அவர்கள் காவலில் இருந்திடுவர். மிகவிரைவில் ஜனநாயகம் வரும் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News