செய்திகள்
தீயை அணைக்கும் வீரர்

சாலை விதியை மீறியதாக அபராதம்: ஆத்திரத்தில் சொந்த பைக்கை தீயிட்டு கொளுத்திய நபர்

Published On 2019-09-05 17:00 GMT   |   Update On 2019-09-05 17:00 GMT
டெல்லியில் போலீசார் சாலை விதியை மீறியதாக கூறி அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த நபர் தன் சொந்த பைக்கை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புது டெல்லி:

நாடு முழுவதும் திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்ற அனைத்து விதமான சாலை விதிமீறல்களுக்கும் அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதனால், நாட்டின் பலத்தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையில், ஒடிசா மாநிலத்தில் சாலை விதிகளை மீறியதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.47 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 13 ஆயிரத்து 500-க்கும் பெறுமானம் உள்ள வாகனத்திற்கு ரூ. 23 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. ஹரியானாவைச் சேர்ந்த ஒரே நபருக்கு 37 ஆயிரும் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஷேக் சராய் என்ற பகுதியில் இன்று போக்குவரத்து போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக மது அருந்தி விட்டு ஒருநபர் தனது பைக்கை ஓட்டி வந்தார். இதனால் அந்த நபருக்கு சாலை விதி மீறியதற்கான அபராதம் விதித்து அதற்கான ஒப்புகைச்சீட்டை போலீசார் வழங்கினர்.   

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது சொந்த பைக்கை நடு ரோட்டில் நிறுத்தி அதன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பற்றி எறிந்த பைக்கை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். 

போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததற்காக தனது சொந்த பைக்கை தீ வைத்து கொளுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 




Tags:    

Similar News