செய்திகள்
பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதுணையாக இருப்போம்: அமித் ஷா-விடம் இண்டர்போல் பொதுச்செயலாளர் உறுதி
பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதுணையாக இருப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா-விடம் இண்டர்போல் பொதுச்செயலாளர் ஜூர்ஜென் ஸ்டாக் உறுதியளித்துள்ளார்.
புதுடெல்லி:
இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜூர்ஜென் ஸ்டாக் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் அவரை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, அதிகரித்துவரும் சைபர் குற்றங்கள், பயங்கரவாத ஒழிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத ஒழிப்பில் இந்தியாவுக்கு உதவுவதாக இண்டர்போல் தலைவர் ஜூர்ஜென் ஸ்டாக் உறுதியளித்தார்.
இதையடுத்து, பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா ஆசிய பிராந்தியத்தில் இந்தியா இண்டர்போலின் மையமாக இருக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும், இந்திய சுதந்திர தினத்தின் 75-வது ஆண்டு கொண்டாடத்தை முன்னிட்டு 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள இண்டர்போல் பொதுக்கூட்டத்தை புதுடெல்லியில் நடத்த வேண்டும் என அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய உள்துறை மந்திரி இண்டர்போல் இந்தியாவில் சிறப்பாக செயல்பட உள்கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.