செய்திகள்
வங்காளதேச தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பீகாரில் கைது
வங்காளதேசத்தில் ஓட்டலில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஒருவரை அதிரடிப்படையினர் பீகாரில் கைது செய்துள்ளனர்.
பாட்னா:
வங்காளதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்ளபட 22 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரத்தாக்குதலை வங்காளதேசத்தில் செயல்பட்டுவந்த ஜேஎம்பி என்ற பயங்கரவாத அமைப்பு அரங்கேற்றியது. இந்த அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அந்த பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் இருந்து ஆள்சேர்க்கும் வேலையை மேற்குவங்காளத்தை சேர்ந்த ஒருவர் ஈடுபட்டுள்ளார். மேலும், அந்த நபர் ஜேஎம்பி பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரதிநிதியாகவும் செயல்பட்டுள்ளார்.
2018-ம் ஆண்டு புத்தகயாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பிலும் இவருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அந்த பயங்கரவாதியை கைது செய்யும் பணியில் இந்திய பாதுகாப்புத்துறை ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், வங்காளதேச தாக்குதலில் தொடர்புடைய அந்த பயங்கரவாதி பீகார் மாநிலத்தின் கையா மாவட்டத்தில் மறைந்திருப்பதாக கொல்கத்தா காவல்துறையின் சிறப்பு அதிரடி பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பீகார் விரைந்த கொல்கத்தா சிறப்பு அதிரடி படையினர் அம்மாநில போலீசார் உதவியுடன் மறைந்திருந்த பயங்கரவாதியை சுற்றிவளைத்து பிடித்தனர்.