செய்திகள்
ராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது- மத்திய மந்திரிக்கு கேரள முதல்வர் கடிதம்
ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்ட பாரத் தர்ம ஜனசேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளிக்கு உதவும்படி மத்திய மந்திரிக்கு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாரத் தர்ம ஜனசேனா கட்சியின் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி. இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்ற துஷார் வெள்ளப்பள்ளி, அங்கு செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
2009ம் ஆண்டு துஷார் வெள்ளப்பள்ளி ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமானத் தொழில் செய்தபோது, அப்துல்லா என்பவருக்கு கொடுக்க வேண்டிய ரூ.19 கோடி பணத்துக்கு செக் கொடுத்துள்ளார். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்தது. இது தொடர்பான விவகாரம் முற்றிய நிலையில், அப்துல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில் துஷார் வெள்ளப்பள்ளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கேரள முதல்வர் பினாயி விஜயன் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், ஐக்கிய அரபு எமிரேட்சியில் துஷார் வெள்ளப்பள்ளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட வரம்பிற்கு உட்பட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் துஷார் வெள்ளப்பள்ளியின் உடல்நிலை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.